ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை, இந்திய இராணுவப் பிரதானி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) சந்தித்துக் கலந்துரையாடினார்.
பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என்றும் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவண தனது கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.
தான் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில், இந்தியாவில் பெற்றுக்கொண்ட இராணுவப் பயிற்சிகள் மற்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ஜனாதிபதி, இந்திய இராணுவப் பயிற்சிகளின் மூலம் நம் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் பண்புகள் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்திய இராணுவத் தலைமையகத்தின் பயிற்சிகளுக்கான கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் ரஜீவ் தாபர், இராணுவ ஆலோசகர் ஜெனரல் விக்ராந்த் விளாஸ் நாயக், வெளிவிவகாரப் பிரிவின் உறுப்பினர் கேர்ணல் மந்தீப் சிங் தில்லன், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, இந்திய இராணுவப் பிரதான பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் இன்று முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்தார்.
இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக இங்கு நினைவுபடுத்திய ஜெனரல் நராவனே, நேர்மறையான இந்த தொடர்பானது இருநாட்டு மக்கள் மற்றும் அனைத்து மட்டத்திலுமான இருதரப்பு உறவை உறுதிப்படுத்துவதற்கு உதவியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உயர் பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட இந்திய இராணுவம் மிக நீண்டகாலமாக இலங்கைக்கு வழங்கி வரும் பரஸ்பர ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
தனது இலங்கை விஜயத்தின் ஒரு கட்டமாக இந்திய இராணுவ பிரதானி, அனுராதபுரம் திசாவெவயில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவை செயலணி பயிற்சிப் பாடசாலைக்கு ஓட்டுநர் மற்றும் துப்பாக்கிச் சுடல் பயிற்சிகளுக்காக பயன்படுத்தக்கூடிய மாதிரி தொழில்நுட்ப பயிற்சி உபகரணத் தொகுதியை நன்கொடையாக வழங்கியதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (kandytamilnews.com)







إرسال تعليق